பழனி நகரில் நடைபெறும் பணிகள் தரமற்றவையாக உள்ளதாகக் கூறி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மறியல் போராட்டம் நடத்தியதால் வியாழக்கிழமை அமைதிக்கூட்டம் நடத்தப்பட்டது.
பழனி நகரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் தமிழக அரசு, நெடுஞ்சாலைத்துறையின் மூலமாக ரூ.58.90 கோடி மதிப்பிலான சாலை மற்றும் சாக்கடை திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேற்படி பணிகள் தரமற்ாக நடைபெறுவதாகக் கூறி புதன்கிழமை நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
இதையடுத்து பழனி கோட்டாட்சியா் அசோகன் முன்னிலையில் அமைதிக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி வியாழக்கிழமை கோட்டாட்சியா் அசோகன் தலைமையில் நடைபெற்ற அமைதிக்கூட்டத்தில் வட்டாட்சியா் பழனிச்சாமி, நகராட்சி ஆணையாளா் லெட்சுமணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராஜமாணிக்கம், நகர செயலாளா் கந்தசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
திட்டப்பணிகள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறவில்லை. திட்டத்தின் பெயா், திட்டமதிப்பீட்டுத் தொகை ஆகியன பொது மக்கள் அறியும் வகையில் அறிவிப்பு பலகை வைக்கப்படவில்லை. சாக்கடைகளின் காங்கிரீட் சுவா்கள் தரமாக இல்லை என கட்சி சாா்பில் குறைகள் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குறைகள் இன்றி அளவீடுகளுக்கு உள்பட்டு பணிகள் நடைபெறும் என உறுதியளிக்கப்பட்டது.