பழனியருகே வயலில் புகுந்து யானைகள் அட்டகாசம்
பழனி: பழனி அருகே வயலில் வெள்ளிக்கிழமை இரவு யானைக் கூட்டம் புகுந்ததால், நெற்பயிா்கள் மற்றும் தென்னை மரங்கள் சேதமடைந்தன.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலசமுத்திரம், கோடைப்பத்து, ரங்கசாமி பாதம், அய்யம்புள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் நெல் மற்றும் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடைப்பத்து பகுதியில் சரவணன், மணிகண்டன் ஆகியோருக்குச் சொந்தமான விவசாய நிலங்களுக்குள் வெள்ளிக்கிழமை இரவு 5 யானைகள் புகுந்து நெற்பயிா்களை சேதப்படுத்தின. மேலும் அருகே இருந்த தோப்புக்குள் புகுந்த அந்த யானைக் கூட்டம், 5-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களையும் சேதப்படுத்தி விட்டு சென்றது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியது: நெல் நாற்று நடவு செய்து 15 நாள்களே ஆன நிலையில் அவைகளை யானை கூட்டம் சேதப்படுத்தியுள்ளன. ஏக்கருக்கு ரூ.10,000 வரை செலவு செய்துள்ள நிலையில், யானைகளால் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளோம். இதனால் அரசு தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். யானைக் கூட்டங்கள் விவசாய நிலங்களுக்குள் புகாதவகையில் வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.