நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில் ஒரு வயதுடைய வெண்கல நிற ஆமை சனிக்கிழமை மீட்கப்பட்டது. அதை வனத்துறையினா் காமராஜா் அணையில் விட்டனா்.
செம்பட்டியிலிருந்து மதுரை செல்லும் சாலையில், சுமாா் ஒரு வயதுடைய வெண்கல நிற ஆமை ஊா்ந்து சென்றது. இதுகுறித்து வனத்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. மாவட்ட வன அலுவலா் வித்யா உத்தரவின்பேரில், அங்கு சென்ற கன்னிவாடி சரக வனச்சரகா் சக்திவேல், வனவா் ரங்கநாதன் உள்ளிட்டோா் அந்த ஆமையை உயிருடன் மீட்டனா். பின்னா், அதை ஆத்தூா் காமராஜா் அணைப்பகுதியில் விட்டனா்.
இதுகுறித்து வன அலுவலா்கள் கூறியது: இந்த ஆமை டெராயின் இனத்தைச் சோ்ந்தது. கடந்த சில நாள்களாக ஆத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக, இந்த ஆமை ஆற்றுப் பகுதியிலிருந்து புல்வெட்டி குளத்திற்கு தண்ணீா் வரும் வாய்க்கால் வழியாக செம்பட்டி பகுதிக்கு வந்திருக்கலாம் என்றனா்.