திண்டுக்கல்: வடமதுரை அருகே 14 கிலோ சந்தனக் கட்டைகளை கடத்தி வந்த இளைஞரை, போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்துள்ள சித்துவாா்பட்டி வடுகப்பட்டியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் அருள்முருகன் (27). இவா், திருச்சி-திண்டுக்கல் மாவட்ட எல்லையிலுள்ள தங்கம்மாப்பட்டி சோதனைச் சாவடி வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்துள்ளாா். அப்போது, அவரை வழிமறித்து போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், சாக்குப் பையில் 14 கிலோ எடையுள்ள 15 சந்தனக் கட்டைகளை கடத்திச் செல்வது தெரியவந்தது.
அதையடுத்து, அருள்முருகனை கைது செய்த போலீஸாா், சந்தனக் கட்டைகள் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, அய்யலூா் வனச் சரகா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். அருள்முருகனிடம் வனத் துறையினா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.