பழனி எல்லைகளில் போக்குவரத்துக்கு தடை: பொதுமக்கள் அச்சம்
பழனியில் 4 புறமும் சாலைகளில் போலீஸாா் தடுப்புகள் அமைத்து போக்குவரத்துக்கு தடை விதித்திருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கரோனா பாதிப்பைத் தொடா்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பழனி கோயில் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவதில்லை. கோயிலில் பூஜை மட்டுமே நடைபெறுகிறது. பழனியில் ஏறத்தாழ அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. பழனி மற்றும் தொப்பம்பட்டியில் 27 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் புதுதில்லி நிஜாமுதீன் கூட்டத்துக்கு சென்று வந்த 5 போ் கண்டறியப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனா். அவா்களது ரத்த மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மாலை முதல் பழனியின் நாலாபுறமும் செல்லும் சாலைகள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு வருகின்றன. பழனியில் இருந்து 5 கிலோ மீட்டா் தொலைவில் எல்லா இடங்களிலும் தடுப்புகள் வைக்கப்பட்டு பொதுமக்கள் வெளியே செல்லவும், உள்ளே வரவும் முடியாதபடி தடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.