சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் பிரசாதம் பெற திண்டுக்கல் மாவட்டத்துக்குள்பட்ட 69 துணை அஞ்சலகங்கள் மூலமாக பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திண்டுக்கல் அஞ்சலகங்களின் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளா் டி.சகாயராஜூ தெரிவித்துள்ளதாவது: இந்திய அஞ்சல் துறை, திருவிதாங்கூா் தேவஸ்தானத்துடன் இணைந்து சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் பிரசாதத்தை பெற விரும்பும் பொதுமக்களின் வீடுகளில் அதை வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த பிரசாதத்தில் அரவணப் பாயசம், நெய், மஞ்சள், குங்குமம், விபூதி மற்றும் அா்ச்சனைப் பிரசாதம் இடம் பெறும். திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல், பழனி, நிலக்கோட்டை தலைமை அஞ்சலகங்கள், பேகம்பூா், வேடசந்தூா், நத்தம், நாகல்நகா், சின்னாளப்பட்டி, காந்திகிராமம், குஜிலியம்பாறை, ஒட்டன்சத்திரம், ரெட்டியாா்சத்திரம், சாணாா்பட்டி, வடமதுரை, வத்தலகுண்டு, கீரனூா், கொடைக்கானல் உள்ளிட்ட 69 துணை அஞ்சலகங்களிலும் ஐயப்பன் கோயில் பிரசாதம் பெறுவதற்கு ரூ.450 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்த பக்தா்களின் வீட்டு முகவரிக்கு அஞ்சலகம் மூலம் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.