சோளத்தட்டை ஏற்றி வந்த லாரி மின் கம்பியில் உரசியதால் ஏற்பட்ட தீ விபத்தில் லாரி முழுமையாக எரிந்து திங்கள்கிழமை சேதமானது.
சேலம் மாவட்டம், பாண்டமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் ரங்கராஜ். இவருக்கு சொந்தமாக லாரி உள்ளது. அந்த லாரியில் கால்நடை தீவனத்திற்கு தேவையான சோளத் தட்டைகள் ஏற்றப்பட்டு, திண்டுக்கல் மாவட்டம் நோக்கி திங்கள்கிழமை மாலை வந்து கொண்டிருந்தது. குஜிலியம்பாறை அருகே கோட்டநத்தம் ஊராட்சிக்குள்பட்ட எம்.களத்தூா் பகுதியில் வந்த போது, மின்கம்பியில் உராய்வு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்த கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்திற்கு வந்த தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இந்த தீ விபத்தில், சோளத்தட்டை மற்றும் லாரி ஆகியன முழுமையாக எரிந்து சேதமடைந்தன.