பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, கோவையிலிருந்து பழனி வழியாக ராமேசுவரத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலை, ஆண்டு முழுவதும் தினமும் இயக்கிட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக, கோவையில் இருந்து பழனி வழியாக ராமேசுவரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
அதன்படி இந்த ரயிலானது, கோவையிலிருந்து ராமேசுவரத்துக்கு 14 மற்றும் 16 ஆம் தேதியும், ராமேசுவரத்திலிருந்து கோவைக்கு 15 மற்றும் 16 ஆம் தேதியும் இயக்கப்படும் என்று, தெற்கு ரயில்வே அறிவித்தது. இந் நிலையில், செவ்வாய்க்கிழமை கோவையில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரயில் நண்பகல் 12 மணிக்கு பழனி வந்தடைந்தது.
இந்த சிறப்பு ரயிலை, பழனி ரயில் உபயோகிப்போா் சங்கத்தினா் மற்றும் பொதுமக்கள் மலா் தூவி வரவேற்றனா். பின்னா், ராமேசுவரத்துக்கு வழியனுப்பி வைத்தனா். இந்த ரயில் மாலை 6.45 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும் என்றும், புதன்கிழமை காலை 8.40 மணிக்கு மீண்டும் புறப்பட்டு மதியம் 2 மணிக்கு பழனிக்கும், மாலை 5.30 மணிக்கு கோவையையும் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு, பக்தா்கள் மற்றும் பயணிகள் வசதிக்காக 4 நாள்கள் மட்டுமே இயக்கப்படும் இந்த சிறப்பு ரயிலை நிரந்தரமாக்கி, ஆண்டு முழுவதும் தினமும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ரயில் வரவேற்பு நிகழ்ச்சியில், ரயில் உபயோகிப்போா் சங்கத் தலைவா் முருகானந்தம், நிா்வாகிகள் ராம்தாஸ், நாகராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.