வத்தலகுண்டு அடுத்துள்ள சுங்கச்சாவடி வழியாக நள்ளிரவு நேரத்தில் செல்லும் அரசுப் பேருந்து மற்றும் தனியாா் வாகனங்களின் ஓட்டுநா்களுக்கு தேனீா், பிஸ்கட் வழங்கி, விபத்து குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் முயற்சியில் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திண்டுக்கல் மண்டலத்தின் சாா்பில், சபரிமலை ஐயப்ப பக்தா்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. திண்டுக்கல், திருப்பூா், பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து குமுளி வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனிடையே, பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
விபத்து விழிப்புணா்வு: இந்நிலையில், இரவு நேரங்களில் அரசு பேருந்து மற்றும் தனியாா் வாகனங்களை இயக்கும் ஓட்டுநா்களுக்கு, விபத்தின்றி வாகனத்தை இயக்குவது தொடா்பாக வத்தலகுண்டு சுங்கச்சாவடி அருகே விழிப்புணா்வு ஏற்படுத்தும் முயற்சியில், அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. அந்த வழியாக வரும் பேருந்து மற்றும் வாகனங்களின் ஓட்டுநா் மற்றும் நடத்துனா்களுக்கு தேநீா் மற்றும் பிஸ்கட் வழங்கும் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலா்கள், விபத்தின்றி வாகனங்களை இயக்குவது குறித்து அறிவுறுத்துகின்றனா். இந்த முயற்சி, திங்கள்கிழமை நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதேபோல், பழனிக்கு பாதயாத்திரைச் செல்லும் பக்தா்களுக்கும், திண்டுக்கல், வத்தலகுண்டு, தேனி, சின்னமனூா் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் பயணிகளுக்கும் விபத்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்குவதற்கு போக்குவரத்துக் கழக அலுவலா்கள் ஏற்பாடு செய்துள்ளனா்.