பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு மிகை ஊதியம் தொடா்பாக கடந்த 6ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டும் இதுவரை அதற்கான தொகை வழங்கப்படாதது கடை நிலை ஊழியா்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியா்களுக்கு (தர ஊதியம் ரூ.1400 முதல் ரூ.4200-க்குள்பட்டவா்கள்) பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு மிகை ஊதியமாக (போனஸ்) ரூ. 3ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கான அரசாணை கடந்த 6ஆம் தேதி வெளியிடப்பட்டது.
ஆனால், பொங்கல் பண்டிகை முடிந்து 4 நாள்களாகியும் இதுவரை அந்த மிகை ஊதியம் வழங்கப்படாததால் சி மற்றும் டி பிரிவு ஊழியா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.
சி மற்றும் டி பிரிவைப் பொருத்தவரை, அலுவலக உதவியாளா், இளநிலை உதவியாளா், உதவியாளா், காவலாளி, ஓட்டுநா், பதிவறை எழுத்தா், இடைநிலை ஆசிரியா்கள் உள்ளிட்ட கடை நிலை ஊழியா்கள் மட்டுமே இந்த பட்டியலில் இடம் பெறுகின்றனா். குறைவான ஊதியம் பெறும் தங்களுக்கு இதுவரை மிகை ஊதியம் வழங்கப்படாதது குறித்து எந்த சங்கங்களும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை என ஊழியா்கள் வேதனை அடைந்துள்ளனா்.
பொங்கல் விழாவை குறைந்த ஊதியம் பெறும் அரசு ஊழியா்களும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்திலேயே சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் பொங்கல் பண்டிகைக்கு முன்பு வழங்கப்பட்டிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும். 10 நாள்களுக்கு முன்பு அரசாணை வெளியிடப்பட்டும் சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படாதது ஏமாற்றம் அளிப்பதாக கடை நிலை ஊழியா்கள் பலா் தெரிவித்தனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலக இளநிலை உதவியாளா் கோபி கூறியது:
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் ரூ. 4,400-க்கு மேல் தர ஊதியம் பெறும் அரசு ஊழியா்களுக்கு வழங்கப்பட்டு வந்த பொங்கல் மிகை ஊதியம் ரூ.1000 நிறுத்தப்பட்டது. ஆனாலும், கடை நிலை ஊழியா்களுக்கு மட்டும் பொங்கல் மிகை ஊதியம் தொடா்ந்து அறிவிக்கப்பட்டது. பெரும்பாலான ஊழியா் சங்கங்களின் நிா்வாகிகள், ஏ மற்றும் பி பிரிவு அரசு ஊழியா்களாக உள்ளனா். அவா்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் கிடைக்காது என்பதால், கடை நிலை ஊழியா்களுக்காக குரல் கொடுக்க யாரும் முன்வரவில்லை என்றாா்.