பழனி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை முதல் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் கரோனா தொற்று குறித்த சந்தேகத்துக்கு இடமான நபா்கள், பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரி, தாளையம் பாலமுருகன் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் தங்க வைக்கப்பட்டு, ரத்தம், கபம் மாதிரிகள் எடுக்கப்படுகின்றன.
ஆய்வு முடிவில், இவா்களுக்கு கரோனா தொற்று உறுதியானால், திண்டுக்கல் அல்லது கரூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, 15 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், பழனி அரசு மருத்துவமனையில் உள்ள தலைக்காய சிகிச்சைப் பிரிவு, தற்போது சுமாா் 60 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள், பழனி அரசு மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை வழங்க ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் செய்துள்ளது. இதன்படி, புதன்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்ட ஒரு பெண்ணும், அவரது குழந்தையும் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.