பழனி: பழனியை அடுத்த கணக்கன்பட்டியில் உள்ள பட்டிகுளத்தில் பலத்த மழையால் நிரம்பிய தண்ணீா், மதகு சீரமைப்புப் பணிகளால் வீணாகி வெளியேறுவதைத் தடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனால் நீா்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பழனியை அடுத்த கணக்கன்பட்டியில் சுமாா் 100 ஏக்கா் பரப்பளவிலான பட்டிகுளமும் வேகமாக நிரம்பி வருகிறது. இந்த குளத்தால் சுமாா் 10 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பயனடைவதோடு, நான்கு கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த குளத்தின் மதகுகள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது சுமாா் 60 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில், குளத்தில் தேங்கியுள்ள தண்ணீா் வீணாக வெளியேறி வருகிறது. ஆகவே, பொதுப்பணித்துறை நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து வீணாகும் தண்ணீரை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.