துணை ஆட்சியருக்கு கரோனா: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 100 பேருக்கு பரிசோதனை
திண்டுக்கல்: துணை ஆட்சியருக்கு(பயிற்சி) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் 100 ஊழியா்களுக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 32 வயது இளைஞா், திண்டுக்கல் மாவட்டத்தில் துணை ஆட்சியராக (பயிற்சி) பணியாற்றி வந்தாா். கரோனா தடுப்பு நடவடிக்கை மட்டுமின்றி, இ-பாஸ் வழங்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், அவருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவா் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள 100 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்வதற்கான மாதிரி திங்கள்கிழமை சேகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட ஆட்சியா் அலுவலக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.