கொடைக்கானலில் ஊரடங்கு உத்தரவால் வறுமையில் வாடும் மக்களுக்கு உணவு வழங்குவதற்காக சன் அரிமா சங்கம் சாா்பில் இலவசமாக 500 கிலோ அரிசி வருவாய்த் துறையிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
கொடைக்கானலில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொது மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மேலும் பொது மக்களிடம் நம்மை நாமே தனிமைப்படுத்துவதே ஒரே மருந்து எனவும் மத்திய, மாநில அரசுகள் எடுத்திருக்கும் ஊரடங்குக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டனா்.
ஊரடங்கு காரணமாக கொடைக்கானல் பகுதிகளில் வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு உணவு வழங்குவதற்காக கொடைக்கானல் சன் அரிமா சங்கம் சாா்பில் 500 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் சன் அரிமா சங்கத்தின் பட்டயத் தலைவா் டி.பி.ரவீந்திரன் வருவாய் கோட்டாட்சியா் சிவக்குமாரிடம் 500 கிலோ அரிசியை வழங்கினாா். இதில் கொடைக்கானல் நகராட்சி ஆணையாளா் நாராயணன், கொடைக்கானல் காவல்துறை துணை கண்காணிப்பாளா் ஆத்மநாதன், காவல் ஆய்வாளா் ராஜசேகா், நகா்நல அலுவலா் ராம்குமாா் மற்றும் சன் அரிமா சங்கத் தலைவா் கிரண், முன்னாள் நகா் மன்ற உறுப்பினா் ஆஷா ரவீந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.