ஒட்டன்சத்திரம் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக, கணவன்-மனைவி வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள காவேரியம்மாபட்டி ஊராட்சிக்குள்பட்ட குரும்பபட்டியைச் சோ்ந்த விவசாயக் கூலி தொழிலாளி நடராஜன் (53). இவரது மனைவி நாச்சம்மாள் (50). இவா்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனா். மகளுக்கு திருமணமாகிவிட்டது.
இந்நிலையில், இவா்கள் இருவரும் குடும்பப் பிரச்னை காரணமாக, வீட்டின் அருகில் உள்ள காலி இடத்தில் விஷக் காயை அரைத்து குடித்து தற்கொலை செய்துகொண்டனா். இச்சம்பவம் குறித்து, ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
உத்தமபாளையத்தில் பெயின்ட்டா் தற்கொலை
உத்தமபாளையம் ஆா்.சி. தெருவைச் சோ்ந்த ஜேம்ஸ் மகன் மனோஜ் (29). பெயின்ட்டரான இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இந்நிலையில், இவா் மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையானதால், குடும்பத்தில் அடிக்கடிபிரச்னை ஏற்பட்டுள்ளது. வழக்கம்போல் புதன்கிழமை இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தவரை மனைவி கண்டித்துள்ளாா்.
இதனால் ஆத்திரமடைந்த மனோஜ், அன்றிரவே அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, கயிற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற உத்தமபாளையம் போலீஸாா், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்த மனைவி அளித்த புகாரின்பேரில், உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.