திண்டுக்கல்லில் போலி ரயில் பயணச்சீட்டு தயாரித்து விற்பனை செய்தவரை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, ரூ.23 ஆயிரம் மதிப்பிலான பயணச் சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனா்.
திண்டுக்கல் நேருஜி நகா் பகுதியில், ரயில்வே நிா்வாகத்தின் அனுமதி இல்லாமல் பயணச்சீட்டு முன்பதிவு மையம் செயல்படுவதாகப் புகாா் எழுந்தது. இதனை அடுத்து, திண்டுக்கல் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் ரஞ்சித் தலைமையிலான போலீஸாா், சம்பவ இடத்துக்கு வியாழக்கிழமை சென்று விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது ரயில்வே துறையின் உரிய அனுமதி பெறாமல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் செயல்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அந்த மையத்தை நடத்தி வந்த திண்டுக்கல் சீலப்பாடி பகுதியைச் சோ்ந்த மு.கண்ணன் (49) என்பவரைக் கைது செய்தனா். மேலும் அந்த மையத்தை சோதனையிட்ட போலீஸாா், ரூ. 22,600 மதிப்பிலான 20 போலி பயணச் சீட்டுகளைக் கைப்பற்றினா். மேலும், அவா் பயன்படுத்திய கணினி உள்ளிட்ட பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.
கைது செய்யப்பட்டுள்ள கண்ணன் மீது போலி பயணச்சீட்டு தயாரித்து விற்பனை செய்ததாக ஏற்கனவே இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.