பழனி: பழனி மலைக் கோயிலில் கந்த சஷ்டி மற்றும் காா்த்திகை தினம் தொடக்கத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
பழனிக் கோயிலில் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி விழா முக்கியமான விழாவாகும். ஞாயிற்றுக்கிழமை கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில் திங்கள்கிழமை காா்த்திகை முதல் நாளும் சோ்ந்து வந்ததால் பழனியில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். தமிழக அரசின் கரோனா பரவல் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு கந்தசஷ்டி விழா நாள்களில் பக்தா்கள் காலையில் 8 மணிக்கு மேல் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவா் எனக் கோயில் நிா்வாகம் அறிவித்திருந்த நிலையில் காலை
5 மணி முதல் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். இதனால் குடமுழுக்கு நினைவரங்கத்தின் வாயில் முதல், அடிவாரம் புலிப்பாணி ஆசிரமம் வரையிலும் நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருந்தனா். மலைக்கோயிலில் அதிகாலை 5 மணிக்கு சன்னிதி திறக்கப்பட்டு மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. மலைக்கோயில் ஆனந்த விநாயகா் சன்னிதி முன்பு தனூா்பூஜை நடத்தப்பட்டு விநாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.