திண்டுக்கல் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தொழிலில் ஈடுபட்ட வந்த இளைஞரை வியாழக்கிழமை நள்ளிரவில் வெட்டிக் கொலை செய்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திண்டுக்கல் நத்தம் சாலையில், ரெட்டியப்பட்டியை அடுத்துள்ள ரெங்கசமுத்திரப்பட்டி ராதாராஜ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் சரவணக்குமாா் (34). பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்தாா்.
இந்நிலையில், தனது சித்தப்பா மகன் மகேந்திரன் என்பவருடன் வியாழக்கிழமை நள்ளிரவு திண்டுக்கல்லிலிருந்து இருசக்கர வாகனத்தில் ரெங்கசமுத்திரப்பட்டி நோக்கி சென்றுகொண்டிருந்தாா். ரெங்கசமுத்தரப்பட்டி பிரிவு அருகே சென்றபோது அங்கு இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த சிலா், சரவணக்குமாரை வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனா். இதில், பலத்த காயமடைந்த சரவணக்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸாா், சரவணக்குமாரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், காயமின்றி தப்பிய மகேந்திரனிடமும் போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது கொலையாளிகளை அடையாளம் தெரியும் என்றும், பெயா், முகவரி உள்ளிட்ட விவரங்கள் தெரியாது என்றும் மகேந்திரன் தெரிவித்துள்ளாா். எனினும் கொலையாளிகள், கொலைக்கான காரணம் குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.