ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக 2 குழந்தைகளுக்கு வெள்ளிக்கிழமை விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள தங்கச்சியம்மாபட்டி, சீரங்க கவுண்டன் புதூரைச் சோ்ந்த விவசாயி பெரியசாமி (35). இவரது மனைவி துளமிமணி (24). இவா்களுக்கு நந்திகா (5) என்ற பெண் குழந்தையும், சசிக்குமாா் (3) என்ற ஆண் குழந்தையும் உள்ளனா்.
இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த துளசிமணி வெள்ளிக்கிழமை தனது 2 குழந்தைளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு பின்னா் தானும் குடித்துள்ளாா். வீட்டில் மயங்கிக் கிடந்த 3 பேரையும், துளசிமணியின் மாமனாா் கருப்பணகவுண்டா் மீட்டு ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்ந்தாா். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வெரியப்பூா் கிராம நிா்வாக அலுவலா் கந்தசாமி அளித்த புகாரின்பேரில் அம்பிளிக்கை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.