கொடகனாற்றில் தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடகனாற்றில் பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்க கோரியும், தண்ணீர் பங்கீடு பிரச்னைக்கு தீர்வு காண கோரியும் கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஓய்வுப் பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி தலைமையிலான ஆய்வுக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு கால தாமதம் ஏற்படுவதாக கூறி, அனுமந்தராயன்கோட்டை, மைலாப்பூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் கடந்த சில நாள்களுக்கு முன்பு திண்டுக்கல் வத்தலகுண்டு புறவழிச்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரிரு நாள்களில் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டபோதிலும், 10 நாள்களாகியும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாவட்ட வருவாய் அலுவலர் தரப்பில் நவ.9ஆம் தேதி கொடகானற்றில் தண்ணீர் திறக்கப்படும் என்ற உத்தரவும் அமலுக்கு வரவில்லை. இந்நிலையில், கன்னிமார் கோயில் பகுதியில் உள்ள தடுப்பணையில் இருந்து கொடகனற்றில் திறக்கப்படும் தண்ணீரை ஆத்தூர் பகுதி விவசாயிகள் அடைந்து விடுவதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக கொடகனாறு பாசன விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். கொடகனாறு நீர் பங்கீட்டு அமல்படுத்த கோரியும், கடமை தவறிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.