கொடைக்கானல் செல்வதற்கு இபாஸ் பெற்றுச் செல்லலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்ததைத் தொடர்ந்து கடந்த 3 வாரங்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை தொடர்ந்துள்ளது.
கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் பொதுவாக நகர்ப் பகுதிகளையொட்டியுள்ள சுற்றுலா இடங்களான செட்டியார் பூங்கா, ரோஜாத் தோட்டம், பிரையண்ட் பூங்கா, வெள்ளி நீர் வீழ்ச்சி, பாம்பார் அருவி உள்ளிட்ட இடங்களை மட்டுமே பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 3 நாள்களாக தொடர் விடுமுறையாக இருந்ததால் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. நகர்ப் பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்களில் அதிகமான பயணிகள் இருந்ததால் கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறை சிற்றூர் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக சென்றனர் பூம்பாறை பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள மகாலட்சுமி கோயில், பழனி கோயில் எழில்மிகு தோற்றம், குழந்தை வேலப்பர் கோவில் மற்றும் இயற்கை எழில் மிகு காட்சிகளையும் பார்த்து சுற்றுலாப் பயணிகள் ரசித்தனர்.
நகர்ப் பகுதிகளில் மட்டும் உள்ள வழக்கமான சுற்றுலா இடங்களை பார்ப்பதற்கு பதிலாக சிற்றூர் பகுதிக்கு சென்று அப்பகுதிகளிலுள்ள இடங்களை பார்த்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.