கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் களைச்செடிகள் மற்றும் குப்பைகளை அகற்ற தண்ணீர் வெளியேறும் பகுதியில் நகராட்சி நிர்வாகத்தினர் வலை அமைத்துள்ளனர்.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நட்சத்திர ஏரியிலிருந்த தண்ணீர் நிரம்பியது. கடந்த 10 நாட்களாக இரண்டு முறை ஏரியில் தண்ணீர் நிரம்பியதால் மதகு திறக்கப்பட்டு ஒன்றரை அடி மட்டும் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
கொடைக்கானல் நட்சத்திர ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீரானது பெரியகுளம், பழனி, மஞ்சளாறு, வத்தலக்குண்டு ஆகியப் பகுதிகளுக்கு குடிதண்ணீராக பயன்படுகிறது.
இந்நிலையில் நட்சத்திர ஏரியில் வளர்ந்திருந்த தாவரச் செடிகளை நகராட்சி நிர்வாகம் அகற்றியது. ஆனால் அகற்றப்பட்ட செடிகள் தண்ணீர் மேல் தேங்கி தண்ணீர் வெளியேறும் இடங்களில் வெளியேறியது.
எனவே ஏரியிலிருந்து தண்ணீர் தூய்மையாக செல்ல தண்ணீர் வெளியேறக் கூடிய ஏரியின் முகப்பு பகுதியில் நகராட்சி நிர்வாகத்தினர் வலை அமைத்துள்ளனர். இதனால் தண்ணீர் வெளியேறும் போது களைச்செடிகள் வலையிலேயே தங்கி விடுகின்றன. நகராட்சி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.