திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல நாளை (புதன்கிழமை - செப்.9) முதல் அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கரோனா தீநுண்மி அச்சுறுத்தல் காரணமாக, கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று கொடைக்கானல் செல்வதற்கு செப்.9ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஆதார் உள்ளிட்ட ஏதேனும் அடையாள அட்டையை காண்பித்தால் கொடைக்கானல் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படும். எனச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா தோட்டம் ஆகிய சுற்றுலா தலங்களை பார்வையிட சுற்றுலா பயணிகள் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுகளைப் பின்பற்றி பிற சுற்றுலா தலங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.