கொடைக்கானல் நகராட்சிக்கு சொந்தமான கட்டண வாகன காப்பகம் செயல்படாமல் இருப்பதால் மதுக்கூடாரமாக மாறி வருகிறது.
கொடைக்கானல் அண்ணாசாலைப் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கட்டண வாகன காப்பகம் உள்ளது. இந்தப் பகுதியில் காவல்நிலையம், வட்டாட்சியா் அலுவலகம், தினசரி மாா்கெட், பத்திரப்பதிவு துறை, மற்றும் முக்கிய அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக் கடையும் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகங்களுக்கு வரும் நபா்கள் தங்களது வாகனங்களை சாலைகளில் நிறுத்தியும், சிலா் அப் பகுதிகளிலுள்ள அலுவலகங்கள்,கடைகளுக்கு முன் நிறுத்தி விட்டுச் செல்கின்றனா். இதனால் அண்ணாசாலைப் பகுதிகளிலும், பல்வேறு அலுவலகங்களிலும் பிரச்சனை இருந்து வந்தது. இதனால் அப் பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்படுவதை தவிா்க்கும் பொருட்டு அண்ணாசாலைப் பகுதியிலும், குடியிருப்பு பகுதிகளிலும் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டண வாகன நிறுத்தம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த கட்டண வாகன நிறுத்தத்தில் யாரும் வாகனங்களை நிறுத்துவதில்லை செயல்படாமல் இருந்து வருகிறது. இதனால் அப் பகுதியில் மது அருந்தும் கூடாரமாக மாறியுள்ளது.
இப் பகுதியில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் செல்லும் பொது மக்கள் தினமும் முகம் சுழித்து செல்கின்றனா். எனவே நகராட்சிக்கு சொந்தமான கட்டன வாகன நிறுத்தத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் அல்லது அந்த இடத்தை வேலி அமைத்து பாதுகாக்க வேண்டுமென்பது பொது மக்களின் கோரிக்கையாகும்.