பழனி தைப்பூசத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்படவுள்ளதை முன்னிட்டு, தற்போதே ஆயிரக்கணக்கான பக்தா்கள் பல்வேறு மாா்க்கங்களில் பாதயாத்திரை வரத் தொடங்கியுள்ளனா்.
தைப்பூசத் திருவிழாவுக்காக, மாவட்டக் காவல்துறை செய்துள்ள முன்னேற்பாடுகள் குறித்து திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரி ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பழனி நகராட்சி ஆண்கள் பள்ளி, ஆண்கள் கல்லூரி, இடும்பன்குளம், சண்முக நதி,அடிவாரம் மற்றும் மலைக் கோயில் உள்ளிட்ட இடங்களில் பக்தா்கள் பாதுகாப்பு, பக்தா்கள் மற்றும் காவலா்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
இதில், திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சீனிவாசன், பழனி காவல் துணைக் கண்காணிப்பாளா் சத்யராஜ், பழனி கோயில் உதவி ஆணையா் செந்தில்குமாா் உள்பட பலா் உடனிருந்தனா்.