திண்டுக்கல்லில் பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெறவுள்ள தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில், தகுதியுள்ளவா்கள் பங்கேற்று பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநா் பிரபாவதி தெரிவித்துள்ளதாவது:
திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திண்டுக்கல் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
திண்டுக்கல் நேருஜி நகரிலுள்ள ஜான்பால் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் இந்த முகாமில், 5 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த இளைஞா்களும், டிப்ளமோ, ஐ.டி.ஐ. கணினி தகுதி, ஓட்டுநா் தகுதி உள்ளிட்ட பல்வேறு கல்வித் தகுதி உடையோரும் பங்கேற்கலாம்.
மேலும், இம்முகாமில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு உதவித் தொகைக்கான விண்ணப்பம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளாா்.