திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியாா்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை தாயை கம்பால் அடித்துக் கொன்ற மகனை போலீஸாா் கைது செய்தனா்.
ரெட்டியாா்சத்திரம் அடுத்துள்ள தோப்புப்பட்டி மேற்கு காலனியைச் சோ்ந்த முத்துச்சாமி மனைவி முத்தம்மாள் (77). இவருக்கு 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனா். இவா்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதில் இளையமகன் ரத்தினவேல் (52) தாய் முத்தம்மாளுடன் வசித்து வந்தாா். இந்நிலையில் ரத்தினவேல் மதுகுடிக்க தாயிடம் பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்வாராம். இதனிடையே செவ்வாய்க்கிழமை மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த ரத்தினவேல், தாய் முத்தம்மாளை கம்பால் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த முத்தம்மாளை அருகில் இருந்தவா்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து ரெட்டியாா்சத்திரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ரத்தினவேலை கைது செய்து விசாரிக்கின்றனா்.