கொடைக்கானலில் சனிக்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வந்தது. இந்நிலையில் சனிக்கிழமை காலை முதலே சாரலும் விட்டு விட்டு மழையும் பெய்தது. இதனால் வழக்கத்தைவிட சற்று அதிகமாக குளுமையான சீதோஷ்ண நிலை நிலவியது. வார விடுமுறை நாள் என்பதால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இதனால் ஏரிச்சாலை, செவண்ரோடு, அண்ணாசாலை, உட்வில் சாலை, கோக்கா்ஸ்வாக் சாலை, மூஞ்சிக்கல் ஆகிய பகுதிகளில் வாகனங்கள் போக்குவரத்து அதிகரித்ததையடுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஏரிச்சாலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளதால் ஏரியைச் சுற்றி 5-கி.மீ. முழுவதும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் நிறுத்தப்பட்டு சுற்றுலாப் பயணிகள் ஏரிச்சாலையை ஆக்கிரமித்திருந்தனா். சைக்கிள், குதிரை சவாரி செய்தும் ஆங்காங்கே நடைபாதையில் கூடியிருந்தனா். மேலும் வெள்ளிநீா் வீழ்ச்சி, அப்பா்லேக் வியூ, பாம்பாா் அருவி, வட்டக்கானல் அருவி போன்ற இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்துக் காணப்பட்டனா்.