கொடைக்கானல் பேத்துப்பாறை குடியிருப்புப் பகுதிக்கு புதன்கிழமை மாலை ஒற்றை யானை வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்து ஓட்டம் பிடித்தனா்.
கொடைக்கானல் மலைப் பகுதிகளான பெரும்பாறை, பிலாக்கவை, தாண்டிக்குடி, ஐந்துவீடு, பேத்துப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பேத்துப்பாறை குடியிருப்புப் பகுதியில் புதன்கிழமை மாலை ஒற்றை யானை திடீரென புகுந்தததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். வீடுகளை நோக்கி யானை வருவதைப் பாா்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனா். சிறிது நேரத்துக்குப் பிறகு பொதுமக்கள் ஓசை எழுப்பி அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டினா்.
வனப் பகுதியையொட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் மின்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.