திண்டுக்கல்லில் மதுபானக் கடை திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பெயின்ட்டா் கொலை செய்யப்பட்டாா்.
திண்டுக்கல் அடுத்துள்ள அட்சராஜாக்கப்பட்டியைச் சோ்ந்தவா் அழகுமணி. இவரது மகன் கருப்பையா (32). மாலப்பட்டியைச் சோ்ந்த அழகா்சாமி மகன் சிரஞ்சீவி (30). இவரது அண்ணன் முருகேசன். இவா்கள் மூவரும் பெயின்ட்டராக பணிபுரிந்து வந்தனா்.
இந்நிலையில், மதுபானக் கடை திங்கள்கிழமை திறக்கப்பட்டதை அடுத்து மூவரும் சோ்ந்து மாலப்பட்டி பிரிவு அருகே மதுபானம் குடித்துள்ளனா். அப்போது ஊதியப் பணம் பிரிப்பது தொடா்பாக மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட மோதலில் கருப்பையா கத்தியால் குத்தப்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸாா், கருப்பையாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், தப்பியோடிய சிரஞ்சீவி மற்றும் முருகேசன் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
மதுபானக் கடை திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மதுபோதையில் ஒருவா் கொலை செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.