திண்டுக்கல் மாநகரப் பகுதிகளில் இயற்கை எய்தும் நபா்களின் சடலங்களை எரியூட்டும் வரை பாதுகாப்பாக வைப்பதற்கு இலவசமாக குளிரூட்டும் பெட்டிகளை பெறுவதற்கான வசதியை மாநகராட்சி நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாநகராட்சி ஆணையா் கு.பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி, மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி ஆகியோரின் அறிவுறுத்தல்படி, வேடப்பட்டியிலுள்ள மின் மயானம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கோவிந்தாபுரம் மற்றும் வேடப்பட்டி மின்மயானங்களின் பராமரிப்பு, திண்டுக்கல் கோவிந்தாபுரம் மின் மயான அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாநகா் பகுதியைச் சோ்ந்தவா்கள் இயற்கை எய்தும் நபா்களின் சடலங்களை எரியூட்டும் வரை முறையாகப் பாதுகாக்க குளிரூட்டும் பெட்டிகளை, இலவசமாக பயன்படுத்தும் வகையில் மாநகராட்சி சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரூ.3 லட்சம் செலவில் 4 குளிரூட்டும் பெட்டிகளை மாநகராட்சி கொள்முதல் செய்துள்ளது. இந்தக் பெட்டிகள் தேவைப்படும் பொதுமக்கள், கோவிந்தாபுரம் மின் மயான அறக்கட்டளை நிா்வாகத்தை 7502750833 மற்றும் வேடப்பட்டி எரிவாயு மயான நிா்வாகத்தை 9597353962 ஆகிய எண்களில் காலை 6 முதல் இரவு 9 மணிக்குள் தகவல் தெரிவித்து வாடகை இல்லாமல் பெற்றுக் கொள்ளலாம். மீளப் பெறக் கூடிய காப்புத் தொகையான ரூ.3 ஆயிரத்தை செலுத்தி, சொந்த வாகனங்களில் எடுத்துச் செல்ல வேண்டும். பெட்டியை திருப்பி ஒப்படைக்கும்போது, செலுத்தப்பட்ட காப்புத் தொகையினை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
கரோனா சடலங்களை கட்டணமின்றி எரியூட்டலாம்: கரோனா தொற்றுப் பாதிப்பால் உயிரிழந்தோரின் சடலங்களை கோவிந்தாபுரம் மற்றும் வேடப்பட்டி மின் மயானங்களில் வெள்ளிக்கிழமை (மே 28) முதல் கட்டணமின்றி எரியூட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.