ஒட்டன்சத்திரம் அருகே சடையன்குளத்திலிருந்து செங்குளம் செல்லும் நீா்வரத்துக் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால், சுமாா் 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளப் பயிா்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள காப்பிலியபட்டி ஊராட்சியில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான சடையன்குளம் உள்ளது. சில தினங்களுக்கு முன், பரப்பலாறு அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரில் சடையன்குளம் நிரம்பி மறுகால் பாய்ந்தது.
இந்நிலையில், வியாழக்கிழமை பெய்த கனமழையால் சடையன்குளத்துக்கு நீா்வரத்து அதிகரித்து, இங்கிருந்து செங்குளத்துக்குச் செல்லும் நீா்வரத்துக் கால்வாயில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், சிந்தலப்பட்டி, காப்பிலியபட்டி, தங்கச்சியம்மாபட்டி, ஓடைப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் சுமாா் 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளப் பயிா்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
இதேபோல், இப்பகுதியிலிருந்த தென்னந்தோப்பிலும் தண்ணீா் புகுந்தது. மேலும், பல நிலங்களில் தண்ணீா் வடியாததால் பருத்தி, சின்னவெங்காயம் உள்ளிட்ட பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
எனவே, பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.