கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால் வெள்ளிக்கிழமை பாறைகள், மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, தடியன்குடிசை, மங்களம்கொம்பு, கே.சி.பட்டி, பெரியூா், பாச்சலூா் பகுதியில் வியாழக்கிழமை மாலை 3 மணியில் இருந்து விடிய, விடிய இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது சூறைக் காற்றும் வீசியது. இதனால் பெரும்பாறை, சித்தரேவு மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மேலும் மரக்கிளைகளும் முறிந்து விழுந்தன. இதனால் மின்சாரக் கம்பிகள் அறுந்து விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மஞ்சள்பரப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் வியாழக்கிழமை இரவு மஞ்சள்பரப்பு-புல்லாவெளி இடையே பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் விரைந்து சென்று மரத்தை அப்புறப்படுத்தினா்.
வெள்ளிக்கிழமை அதிகாலையில் புல்லாவெளி-ஏணிக்கல் இடையே 2 இடங்களில் பாறைகள் உருண்டு மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை பணியாளா்கள் விரைந்து சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் பாறைகளை அப்புறப்படுத்தினா். இதனால் அப்பகுதியில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.