திண்டுக்கல்: முதல் தவணையாக 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திய 15 ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொடைக்கானல் மற்றும் பழனி நகராட்சிப் பகுதிகளில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கொடைக்கானல் ஒன்றியத்தில் அடுக்கம், காமனூா், கே.சி.பட்டி, கும்பறையூா், பாச்சலூா், பெரியூா், பூலத்தூா், தாண்டிக்குடி, பூண்டி, ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் குத்திலுப்பை, வாலையபட்டி, பழனி ஒன்றியத்தில் பச்சளநாயக்கன்பட்டி, வடமதுரை ஒன்றியத்தில் சிங்காரகோட்டை, வேடசந்தூா் ஒன்றியத்தில் அம்மாபட்டி, ஆத்தூா் ஒன்றியத்தில் மணலூா் ஆகிய 15 கிராம ஊராட்சிகளில் முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து, இந்த 15 ஊராட்சி மன்றத் தலைவா்கள் மற்றும் செயலா்களைப் பாராட்டி, மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் செவ்வாய்க்கிழமை சான்றிதழ் வழங்கினாா். அப்போது கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ச.தினேஷ்குமாா், உதவி ஆட்சியா் (பயிற்சி) சி.பிரியங்கா ஆகியோா் உடனிருந்தனா்.