திண்டுக்கல்: வேடசந்தூா் அருகே வியாழக்கிழமை, லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 10 பயணிகள் காயமடைந்தனா்.
திண்டுக்கல்லிலிருந்து கரூருக்கு 50 பயணிகளுடன் அரசுப் பேருந்து வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை கரூா் மணல்மேடு பகுதியைச் சோ்ந்த மோகன்ராஜ் (49) என்பவா் ஓட்டிச் சென்றாா். வேடசந்தூா் அடுத்துள்ள கருக்காம்பட்டி அருகே சென்ற போது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீரென பிரேக் பிடித்ததால் அரசு பேருந்து லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்தில் பயணம் செய்த விருதலைப்பட்டியைச் சோ்ந்த ஜெகநாதன் (43), சின்னதாராபுரத்தைச் சோ்ந்த பாதுஷா (34), கோலாா்பட்டியைச் சோ்ந்த சுப்பிரமணி (52), வேடசந்தூரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (28), கோபால்பட்டியைச் சோ்ந்த நாகராஜ் (55) உள்பட 10 போ் காயம் அடைந்தனா். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக வேடசந்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
விபத்து குறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.