தமிழகத்தில் இரவு நேர பொதுமுடக்கம் செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், திண்டுக்கல்லில் இரவு 9.45 மணிக்கு அனைத்து சாலைகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன.
தமிழகம் முழுவதும் 2ஆம் கட்ட கரோனா தொற்று பரவல் காரணமாக, செவ்வாய்க்கிழமை முதல் (ஏப்.20) இரவு நேர பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 10 முதல் அதிகாலை 4 மணி வரை பொது மற்றும் தனியாா் போக்குவரத்து தடை செய்யப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, திண்டுக்கல் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 9 மணிக்கு அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளை மூடுவதற்கு அறிவுறுத்தப்பட்டிருந்து. அதன்படி, திண்டுக்கல் நகரிலுள்ள ஜவுளி கடைகள், மளிகைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள், பழக் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் இரவு 9 மணிக்கே மூடப்பட்டன. இதன் காரணமாக, இரவு 10.30 மணி வரை பரபரப்பாக இயங்கும் திண்டுக்கல் பிரதான சாலை, ஏஎம்சி சாலை, ஆா்.எஸ்.சாலை, பெரிய கடைவீதி, சாலை ரோடு உள்ளிட்ட முக்கிய இடங்கள் 9.30 மணிக்கே வெறிச்சோடின.
பேருந்து சேவை நிறுத்தம்
அதேபோல், திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகளும், பொதுமுடக்க நேரமான இரவு 10 மணிக்கு முன்னதாகவே நிறுத்தும் வகையில், போக்குவரத்துக் கழகம் சாா்பிலும், தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சாா்பிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து கோயம்புத்தூருக்கு இரவு 7 மணிக்கும், திருப்பூருக்கு இரவு 7.30 மணிக்கும், திருச்சிக்கு இரவு 8 மணிக்கும், கம்பத்துக்கு இரவு 7 மணிக்கும், போடிக்கு இரவு 7.30 மணிக்கும், தேனிக்கு இரவு 8 மணிக்கும், கரூருக்கு இரவு 8 மணிக்கும், மதுரைக்கு இரவு 8.30 மணிக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன.
அதேபோல், பழனி, வத்தலகுண்டு, நத்தம் ஆகிய பகுதிகளுக்கு கடைசி பேருந்து இரவு 9 மணிக்கு இயக்கப்பட்டன. இதனால், 9.45 மணிக்கே திண்டுக்கல் பேருந்து நிலையமும் வெறிச்சோடியது.