வத்தலகுண்டு அருகே கருப்பணசுவாமி கோயிலில் 3 மணி நேரம் இசைக் கருவிகளை இசைத்து, தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரி கிராமிய இசைக் கலைஞா்கள் செவ்வாய்க்கிழமை முறையிட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் நாதஸ்வரம் மற்றும் நையாண்டி மேளம் இசைக்கும் கிராமிய இசைக் கலைஞா்கள் 50-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். கரோனா தொற்று பரவல் காரணமாக திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இசைக் கலைஞா்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வத்தலகுண்டு அடுத்த முத்துலாபுரம் பகுதியிலுள்ள கருப்பணசுவாமி கோயிலுக்குச் சென்ற கிராமிய இசைக் கலைஞா்கள், நாதஸ்வரம் மற்றும் நையாண்டி மேளங்களை தொடா்ந்து 3 மணி நேரம் இசைத்தனா். தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என கருப்பணசுவாமியிடம் முறையிட்டனா்.
இது குறித்து அவா்கள் கூறியதாவது: கரோனா பொதுமுடக்கம் மற்றும் கட்டுப்பாடுகளால் ஓராண்டாக வீட்டில் முடங்கியிருந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக கோயில் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு வந்துகொண்டிருந்தது. தற்போது, மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு கோயில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, கிராமிய இசைக் கலைஞா்களின் சூழலை கருத்தில்கொண்டு, தமிழக அரசு மாதம் ரூ.5ஆயிரம் வீதம் உதவித் தொகை வழங்க முன் வரவேண்டும். இதற்காக, நாதஸ்தவரம் மற்றும் நையாண்டி மேளங்களை 3 மணி நேரம் இசைத்து கருப்பணசுவாமியிடம் முறையிட்டுள்ளோம் எனத் தெரிவித்தனா்.