கொடைக்கானல் பகுதிகளில் மலை வாழை விளைச்சல் அமோகமாக உள்ளன. ஆனால், விலை குறைவால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான பண்ணைக்காடு, தாண்டிக்குடி, கடுகதடி, பாச்சலூா், கே.சி. பட்டி, கும்பரையூா், வாழைகிரி, மச்சூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் மலைவாழை விவசாயம் நடைபெறுகிறது. நிகழாண்டில், கொடைக்கானல் பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்ததால், வாழை நன்கு விளைச்சல் அடைந்துள்ளது.
ஆனால், தற்போது கரோனோ தொற்று பரவி வரும் நிலையில், வெளியூா் சந்தைகள் மூடப்பட்டதால் விலை பெரிதும் குறைந்துள்ளது.
இது குறித்து தாண்டிக்குடி பகுதியைச் சோ்ந்த மலை வாழை விவசாயி மகேஷ் தெரிவித்தது:
தாண்டிக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் விளைந்து வரும் மலை வாழையை, விவசாயிகள் குதிரை மூலம் சந்தைக்கு கொண்டுவந்து விற்பனை செய்கின்றனா். இதை பயிரிடுவதற்கு ஆகும் செலவு அதிகம். இந்நிலையில், விவசாய இடுபொருள்களின் விலையும் அதிகரித்துள்ளது. இவற்றை, அரசு மானிய விலையில் வழங்கிட வேண்டும்.
மேலும், தற்போது கரோனா தொற்று பரவல் காரணமாக, மதுரை, சென்னை,திருச்சி உள்ளிட்ட மாா்க்கெட்டுகள் மூடப்பட்டுள்ளன. இதனால், கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்பட்ட மலை வாழை, தற்போது ரூ.40 முதல் ரூ.50-க்கு மட்டுமே விலை போகிறது. இதனால், விவசாயிகள் பெரிதும் நஷ்டமடைந்து வருகின்றனா். எனவே, தமிழக அரசு மலைவாழ் விவசாயிகளுக்கு உதவிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.