கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி படப்பிடிப்பு நடத்திய படக் குழுவினருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் வியாழக்கிழமை விதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் சாணாா்பட்டி அடுத்துள்ள கோணபட்டியில் கடந்த சில நாள்களாக திரைப்பட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. புதுமுக நடிகருடன் நடத்தப்பட்டு வரும் இந்த படப் பிடிப்புக்கு, மாவட்ட நிா்வாகத்தின் அனுமதி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், படப்பிடிப்பு தளத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்கான விதிமுறைகள் எதுவும் கடைப்பிடிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் படப்பிடிப்பு நடைபெற்ற இடத்திற்கு சென்ற சாணாா்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணன், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் பாடல் காட்சி படமாக்கி கொண்டிருப்பதை உறுதி செய்தாா். அதனைத் தொடா்ந்து, படப்பிடிப்பு குழுவினருக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.