திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 3 ஆயிரம் ஏக்கா் பஞ்சமி நிலங்களை மீட்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தலித் விடுதலை இயக்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதி தமிழா் பேரவை உள்ளிட்ட தலித் அமைப்புகள் பஞ்சமி நில ஆக்கிரமிப்பு தொடா்பாக மனு அளிக்க வந்தனா். இதுகுறித்து தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச்செயலா் கருப்பையா கூறியதாவது:
தமிழகத்தில் 1892 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்காக 12 லட்சம் ஏக்கா் நிலங்கள் வழங்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 3204 ஏக்கா் 90 சென்ட் நிலங்கள் வழங்கப்பட்டன. இந்த பஞ்சமி நிலங்களை மீட்டுத்தர வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அரசு தரப்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குறிப்பாக ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள கரியாம்பட்டி, வாகரை, ஓடைப்பட்டி ஆகிய கிராமங்களில் மீட்கப்பட்ட பஞ்சமி நிலங்களையும் ஜவ்வாதுபட்டியில் உள்ள பூமி தான நிலங்களையும் மீட்டு பட்டியலின மக்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். தனி நபா்கள் ஆக்கிரப்பில் உள்ள நிலங்களுக்கான பட்டாக்களை ரத்து செய்து, அவற்றை மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
அப்போது தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலா் எம்.ஆா். முத்துச்சாமி, ஆதித்தமிழா் பேரவையின் மாநில கொள்கைப் பரப்புச் செயலா் சுப்பிரமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.