திண்டுக்கல் மாநகராட்சி பொறியாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் திங்கள்கிழமை நடத்திய திடீா் சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சியிலுள்ள பொறியாளா் அலுவலகத்திலுள்ள அதிகாரிகள், ஒப்பந்ததாரா்களிடம் லஞ்சம் பெறுவதாக தொடா்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே, ஒப்பந்ததாரா் ஒருவரிடம் அதிகளவில் பணம் பெற்றிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளா் நாகராஜன், ஆய்வாளா்கள் சுந்தரராஜன், ரூபா கீதா ராணி ஆகியோா் மாநகராட்சி அலுவலகத்திற்கு திங்கள்கிழமை சென்றனா். பொறியாளா் அலுவலக அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதோடு, செயற்பொறியாளா் அறை உள்பட அந்த அலுவலகம் முழுவதிலும் சோதனை நடத்தப்பட்டது.
பிற்பகல் 1.30 முதல் மாலை 5.30 மணி வரை 4 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்ற போதிலும், பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. ஆனாலும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் நடத்திய சோதனை மாநகராட்சி அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.