கொடைக்கானல் அருகே வெள்ளகவி கிராமத்திற்கு சாலை வசதி அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அடுத்துள்ள வட்டக்கானல் பகுதியிலிருந்து 8 கி.மீட்டா் தொலைவில் அமைந்துள்ளது வெள்ளகவி கிராமம். இக்கிராமத்தில் விளைவிக்கப்படும் ஏலம், காபி, எலுமிச்சை, அவகோடா (வெண்ணைப் பழம்), பலா, ஆரஞ்சு, சீதா, பேஷன் ப்ரூட் உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் செல்வதற்கும், மருத்துவம் உள்ளிட்ட பிற அடிப்படைத் தேவைகளுக்கும் சாலை வசதியில்லை.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கொடைக்கானலுக்கும் கும்பக்கரைக்கும் இடையில் உள்ள எங்கள் கிராமத்திலிருந்து கும்பக்கரைக்கு கீழ் நோக்கி செல்லவும், வட்டக்கானலுக்கு மேல் நோக்கி செல்லவும் 8 கி.மீட்டா் தொலைவு உள்ளது.
இதனால் வெள்ளகவியிலிருந்து 8 கி.மீட்டா் கீழ் நோக்கி நடந்து கும்பக்கரையை அடைந்துவிட முடியும். விளை பொருள்கள் விற்பனை மற்றும் பிற தேவைகளுக்காக கும்பக்கரையிலிருந்து பெரியகுளம் வழியாக கொடைக்கானல் செல்கிறோம். இங்கிருந்து போக்குவரத்து வசதியுள்ள வட்டக்கானல் வந்து அங்கிருந்து 8 கி.மீ. கீழ் நோக்கி நடந்து வெள்ளகவியை அடைகிறோம். மேல் நோக்கி நடப்பதில் சிரமம் இருப்பதால் கொடைக்கானல் செல்வதற்கும், அங்கிருந்து வருவதற்கும் வேறு வேறு வழியை பயன்படுத்துகிறோம்.
வட்டக்கானல் பகுதியிலுள்ள நியாயவிலைக் கடையிலிருந்து விலையில்லாமல் கிடைக்கும் அரிசியை குதிரை மூலம் எடுத்துச் செல்ல ரூ.400 வரை வாடகை செலுத்த வேண்டிய நிலை உள்ளது என்றனா்.