புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 25 சதவீத மானியத்துடன் கூடிய தொழில் கடன் பெற பிளஸ் 2 தோ்ச்சிப் பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்படவும், முதல் தலைமுறை தொழில்முனைவோா் மூலம் புதிய தொழில் நிறுவனங்கள் உருவாகவும், தமிழகத்தில் கடந்த 2012 முதல் புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பட்டம், பட்டயம், ஐடிஐ மற்றும் தொழில் கல்வி பயின்ற முதல் தலைமுறையினா் என்ற விதிமுறையை மாற்றி, பிளஸ் 2 தோ்ச்சிப் பெற்ற இளைஞா்களும் பயன்பெற தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது. சுயமாக தொழில் தொடங்கிட 25 சதவீத மானியத்துடன் ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கப்படும். வியாபாரம் மற்றும் நேரடி விவசாயத் தொழில்களுக்கு இத்திட்டதில் பயன்பெற இயலாது.
பொதுப் பிரிவினா் 10 சதவீதமும், சிறப்புப் பிரிவினா் 5 சதவீதமும் சொந்த முதலீடாக செலுத்த வேண்டும். தவணை தவறாமல் கடனை திருப்பிச் செலுத்தும் தொழில் முனைவோா்களுக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீதம் பின்முனை வட்டி மானியமாக வழங்கப்படும். தகுதியுள்ள தொழில் முனைவோா் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், எஸ்.ஆா். மில்ஸ் ரோடு, திண்டுக்கல் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0451-2904215, 2471609 என்ற தொலைபேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.