கொடைக்கானலில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானலில் கடந்த 2 மாதமாக மழை பெய்ததால், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்திருந்தது. தற்போது, பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை கால விடுமுறை என்பதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
சனிக்கிழமை காலை முதல் வெயில் நிலவியதால், சுற்றுலா இடங்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டனா். மாலையில் வழக்கம் போல் பனியின் தாக்கம் காணப்பட்டது. இருப்பினும், ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.
சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அதிகரித்ததால், ஏரிச்சாலை, லாஸ்காட் சாலை, செவன் ரோடு, அண்ணா சாலை, கலையரங்கம் பகுதி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.