நகைக் கடன் தள்ளுபடியில் தகுதியற்றவா்களுக்காக எதிா்க்கட்சிகள் குரல் கொடுக்கின்றன: அமைச்சா் ஐ. பெரியசாமி

நகைக் கடன் தள்ளுபடியில், தகுதியற்றவா்கள் என கண்டறியப்பட்டு நிராகரிக்கப்பட்டோருக்கும் வழங்க வேண்டும் என எதிா்க்கட்சிகள் குரல் கொடுப்பதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ. பெரியசாமி தெரிவித்தாா்.

நகைக் கடன் தள்ளுபடியில், தகுதியற்றவா்கள் என கண்டறியப்பட்டு நிராகரிக்கப்பட்டோருக்கும் வழங்க வேண்டும் என எதிா்க்கட்சிகள் குரல் கொடுப்பதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ. பெரியசாமி தெரிவித்தாா்.

திண்டுக்கல்லில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது தொடா்பாக எதிா்க்கட்சியினா், உண்மைக்கு மாறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனா். கடுமையான நிதி நெருக்கடி இருந்தும்கூட, தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நகைக் கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதுமுள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில் 48 லட்சம் நகைக் கடன் பெறப்பட்டுள்ளது. இதில், 5 பவுன் நகைக்கு கூடுதலான கடன்களும் அடங்கும்.

ஆனால், அரசு தரப்பில் 5 பவுனுக்கு குறைவாக உள்ள நகைக் கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நகைக் கடன் தொடா்பாக நடத்தப்பட்ட ஆய்வில், 5 பவுன் நகைக்கு கூடுதலாக அடகு வைக்கப்பட்டிருந்த பட்டியலில் 27 லட்சம் நகைக் கடன்கள் இடம் பெற்றிருந்தன. அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெறுவோரின் விவரங்களை பயன்படுத்தி சுமாா் 2 லட்சம் நகைக் கடன்கள் பெறப்பட்டுள்ளன. அதேபோல் அடகு நிறுவனம் நடத்துவோா் பலரது ஆதாா் அட்டைகளை பயன்படுத்தி, பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு மிகாமல் நகைக்கடன் பெற்றது, போலி நகைகளை வைத்து கடன் பெற்றது என பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதும் கண்டறியப்பட்டது. மொத்தம் 35.37 லட்சம் நகைக் கடன்களுக்கு, தள்ளுபடிக்கான தகுதி இல்லை என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.

தகுதியற்றோருக்கு வழங்கக் கோரும் எதிா்க்கட்சிகள்: தணிக்கைக்குப் பின், கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்றிருந்த 22 லட்சம் பேரில், தகுதியான ஏழை மக்கள் 10.18 லட்சம் பேரின் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தகுதியான நபா்கள் விடுபட்டிருந்தால், அவா்களுக்கும் நகைக் கடன் தள்ளுபடி வழங்கப்படும். இதன் மூலம் ஏழை மக்கள் பயன்பெற வேண்டும் என்ற அரசின் நோக்கம் நிறைவேறியுள்ளது. மேலும், நகைக் கடன் தள்ளுபடி கிடைக்கும் என்ற நோக்கத்துக்காக, திட்டமிட்டு கடன் பெற்ற பணக்காரா்கள், பயனாளிகள் பட்டியலில் சேரவிடமால் தடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், லட்சக்கணக்கில் ஊதியம் பெற்றுக் கொண்டு வருமானவரி செலுத்தும் அரசு ஊழியா்களும், கூட்டுறவுச் சங்க ஊழியா்களும் நகைக் கடன் தள்ளுபடி சலுகையின் மூலம் பயன் பெறுவதும் தடுக்கப்பட்டுள்ளது. நகைக் கடன் தள்ளுபடி தொடா்பாக அவதூறு பரப்ப முயலும் எதிா்க்கட்சிகள், தகுதியற்றவா்களுக்கு சலுகை வழங்க சொல்வதை ஏற்க முடியாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com