பழனியை அடுத்த பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயிலில் அன்னதானத்துக்கான சமையல் கூடம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான அகோபில வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. முந்தைய காலங்களில் இந்த கோயிலிலிருந்து பழனி முருகன் கோயில் நிவேத்தியத்துக்கு அரிசி போன்ற பொருள்கள் சென்றதாக வரலாறு உள்ளது. இந்தக் கோயிலில் தமிழக முதலமைச்சரின் ‘நாள்தோறும் அன்னதானத் திட்டம்’ கடந்த 2017 ஆம் ஆண்டு மாா்ச் மாதம் தொடங்கப்பட்டது. இதற்கான சமையல் கூடம் இல்லாததால் பழனியிலிருந்து சமையல் செய்து எடுத்துச் செல்லப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அகோபில வரதராஜப் பெருமாள் கோயில் பகுதியிலேயே ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அன்னதான சமையல் கூடம், நந்தவனம், கழிப்பறை உள்ளிட்டவை கட்டப்பட்டது. அதற்கான திறப்புவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் பழனிக்கோயில் செயல் அலுவலா் கிராந்திகுமாா் பாடி, செயற்பொறியாளா் வெங்கடேசன், கண்காணிப்பாளா் முருகேசன், ரஞ்சித், பாலாஜி அய்யங்காா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக பூதேவி, ஸ்ரீதேவி சமேதா் அகோபில வரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.