திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு 9.53 லட்சம் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படவுள்ளன.
திண்டுக்கல், பழனி, வத்தலகுண்டு, வேடசந்தூா் ஆகிய 4 கல்வி மாவட்டங்களில் அரசு, அரசு உதவி பெறும், சுய நிதி, தனியாா் என மொத்தம் 1980 பள்ளிகள் உள்ளன. இதில் சுமாா் 3.50 லட்சம் மாணவா்கள் பயின்று வருகின்றனா். இதில் 1632 பள்ளிகள், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளாக செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சமாா் 3 லட்சம் மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்நிலையில் 2021-22ஆம் கல்வி ஆண்டிற்கான பாடப் புத்தகங்கள் அந்தந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கான பாடப் புத்தகங்கள் திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம், அந்தந்தப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு மொத்தம் 9.53 லட்சம் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. அதில் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் 2.54 ஆயிரம் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.