ஆத்தூா் தாலுகா அலுவலகத்துக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வந்து சோ்ந்தன.
ஆத்தூா் சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜசேகரன், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் பவித்ரா ஆகியோா் தலைமையிலும், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினா் நடராஜன், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் செல்வராஜ் உள்ளிட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையிலும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உரிய பாதுகாப்புடன் ஆத்தூா் தாலுகா அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்ட அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டன.
அப்போது தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜசேகரன் கூறியதாவது: தற்போது ஆத்தூா் தொகுதிக்கு தேவையான 550 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் இதரப் பொருள்கள் தாலுகா அலுவலகத்துக்கு வந்து சோ்ந்தன. அவை பாதுகாப்பாக அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளன. இங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவாா்கள் என்றாா்.