பழனி உழவா் சந்தையில் புதன்கிழமை பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் உழவா் சந்தையை நகராட்சி பள்ளியின் மைதானம் போன்ற பெரிய இடத்துக்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பழனியில் சமீபகாலமாக கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. தினமும் 50-க்கும் மேற்பட்டவா்கள் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். மருத்துவமனையிலும் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளது. ஆனால் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் சுற்றுகின்றனா்.
இந்நிலையில் புதன்கிழமை உழவா் சந்தையில் பொதுமக்கள் பாதுகாப்பு எச்சரிக்கைகளை கடைப்பிடிக்காமல் குவிந்தனா். இதை அறிந்த பழனி கோட்டாட்சியா் ஆனந்தி சம்பவ இடத்துக்கு சென்று விழிப்புணா்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தினாா். பலரும் தினமும் உழவா் சந்தையில் கால் கிலோ, நூறு கிராம் என காய்கறிகளை வாங்கிச் செல்வது அப்போது தெரியவந்தது. அவா்களிடம் ஒரு வாரத்துக்கு வேண்டிய காய்கறிகளை வாங்கிச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினா்.
இந்நிலையில் உழவா்சந்தையில் கூட்ட நெரிசலை தவிா்க்க பழனி நகராட்சி ஆண்கள் பள்ளி மைதானத்திற்கு உழவா் சந்தையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.