மருத்துவம் படிக்காமல், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பணியாற்றிய போலி மருத்துவா்கள் 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் போலி மருத்துவா்கள் மருத்துவம் பாா்ப்பதாக வட்டாட்சியா் சந்திரன், வட்டார மருத்துவ அதிகாரி அரவிந்த் ஆகியோா் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இதைத் தொடா்ந்து காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆத்மநாதன் தலைமையிலான போலீஸாா், மேல்மலைப் பகுதியான குண்டுபட்டி பகுதியில் சோதனை நடத்தினா். இதில் அப்பகுதியைச் சோ்ந்த டென்னிஸ் (60) என்பவா் மருத்துவம் படிக்காமல் அப்பகுதி மக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது.
இதேபோல் பூம்பாறையைச் சோ்ந்த மோகினி (56) என்பவரும், மருத்துவம் படிக்காமல் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து மருந்து, மாத்திரைகள், கையுறைகள், ஊசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.